தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் நாயகிகளாக 3 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'தி க்ரே மேன்' ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார் தனுஷ். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் கார்த்திக் நரேன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்பவுள்ளார்.
சென்னை திரும்பியவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் தனுஷ். மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகிகளாக 3 பேர் நடிக்கவுள்ளனர். அதற்காக ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹன்சிகா தவிர்த்து மீதி இருவருமே தனுஷுடன் இந்தப் படத்தில்தான் முதன்முறையாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் - அனிருத் ஜோடி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.