அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், 'புஷ்பா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்புடன் 'புஷ்பா' முதல் பாகம் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. செகுந்தராபாத்தில் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக இரண்டாம் பாகத்தில்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் ஃபகத் பாசில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.