பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர்கள் மகேஷ் பாபு, அனுபம் கேர், சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திலீப்பின் உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்தத் தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திலீப் குமாரின் மறைவுச் செய்தி வந்தவுடனேயே பலரும் தங்கள் இரங்கல் செய்தியை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர ஆரம்பித்தனர். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். நடிகர் ஷாரூக் கான், தர்மேந்திரா, நடிகை வித்யா பாலன் உள்ளிட்டோரும் திலீப் குமாரின் இல்லத்துக்கு நேரில் சென்றுள்ளனர்.
» என் ஆதர்ச நாயகனை இழந்துவிட்டேன்: திலீப் குமார் மறைவுக்கு அமிதாப் இரங்கல்
» இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார்: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி - திரைத்துறையில் ஒரு சகாப்தமாக திலீப் குமார் அவர்கள் நினைவுகூரப்படுவார். ஈடு இணையற்ற திறமை அவருக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருந்தது. அதனால் தலைமுறைகளைக் கடந்த ரசிகர்கள் அவரை ரசித்தனர். கலை உலகுக்கு அவரது மறைவு ஒரு இழப்பு. அவரது குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு, கணக்கிலடங்கா ரசிகர்களுக்கு என் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஸ்ரீ திலீப் குமார் அவர்கள் வெள்ளித் திரையின் உண்மையான சகாப்தம். இந்திய சினிமா அதன் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரை இழந்து விட்டது. தனது நடிப்பில் மூலம், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் பல தலைமுறை சினிமா பிரியர்களுக்கு பொழுதுபோக்கு அளித்துள்ளார். அவரது குடும்பத்துக்கு, ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சச்சின் டெண்டுல்கர் - உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் திலீப் குமார் அவர்களே. உங்களைப் போல இன்னொருவர் இனி கிடையாது. இந்திய சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது. உங்கள் இழப்பை உணர்வோம். சாய்ரா பானு அவர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இரங்கல்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - · பல தலைமுறையினர் நேசித்த ஒரு சகாப்தம் மறைந்துவிட்டார். ஆன்மா சாந்தியடையட்டும்.திலீப்ஜி. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் - திலீப் ஐயாவின் மறைவால் அதிக வருத்தப்பட்டேன். இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடிப்பு மேதை. வரப்போகும் பல தலைமுறைகளுக்கு ஒரு ஊக்கம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி - அல்லாவுக்கே நாம் சொந்தம், அவரிடமே நாம் திரும்பச் செல்வோம். கைபர் பக்துன்வா மாகாணத்திலிருந்து, மும்பை வரை, உலகம் முழுக்க இருக்கும் யூசுஃப் கான் அவர்களின் ரசிகர்களுக்குப் பெரிய இழப்பு. நமது இதயத்தில் அவர் தொடர்ந்து வாழ்வார். சாய்ரா பானு அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நடிகர் அனுபம் கேர் - சகாப்தம் என்றும் வாழ்வார். வரப்போகும் தலைமுறைகளீல் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்குள்ளும் திலீப் குமார் அவர்களின் ஒரு சாயல் என்றும், எப்போதும் இருக்கும். அவரது நடிப்பு மாயாஜாலத்தைப் போல. நான் உங்களுடன் செலவிட முடிந்த அற்புதமான அந்தத் தருணங்களுக்கு நன்றி சார். வாழ்க்கை, வாழ்வது, நடிப்பு ஆகியவை குறித்து நீங்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்தீர்கள்.
நடிகர் சல்மான் கான் - இந்திய சினிமா கண்ட, இனி பார்க்க முடியாத மிகச் சிறந்த நடிகர்
நடிகை ராதிகா சரத்குமார் - நடிகர் திலீப் குமார் அவருக்கு என் வணக்கங்கள். ஒரு நடிகருக்கான கடினமான விஷயங்களை மிக எளிது போலக் காட்டியவர். பலரும் எட்ட முயற்சிக்கும் அளவுக்கு தரத்தை உயர்த்தியவர். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார். நீங்கள் என்றும் மறக்கப்பட மாட்டீர்கள். .
நடிகர் மகேஷ் பாபு - காலத்தைக் கடந்த ஒரு சகாப்தம். உலகம் முழுக்க இருக்கும் நடிகர்களுக்கு அவரது உயரிய நடிப்புத் திறமை தொடர்ந்து ஊக்கம் தரும். இந்திய சினிமாவுக்குப் பெரிய இழப்பு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் திலீப் குமார் அவர்களே. நீங்கள் இல்லாத குறையை அதிகம் உணர்வோம்.
நடிகர் புனீத் ராஜ்குமார் - திலீப்குமார் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது ஆசிர்வாதம். அப்பாவும், திலீப் அவர்களும் பரஸ்பர அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அப்பாவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது கொடுக்கப்பட்ட போது திலீப் குமார் அவர்களை சந்தித்த இன்னும் நினைவில் இருக்கிறது. இந்திய சினிமாவுக்கு திலீப் குமார் ஆற்றிய உயரிய பங்குக்காக என்றும் நினைவில் இருப்பார்.
நடிகர் மாதவன் - தனது நடிப்புத் திறமையின் மூலம் மட்டுமே பலரது ஆச்சரியத்தை, மரியாதையை பெற்ற உயர்ந்த கலைஞர் காலமாகிவிட்டார். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் திலீப் குமார் அவர்களே. உங்களைப் போல இன்னொருவர் இனி இல்லை.