மீண்டும் சற்குணம் இயக்கத்தில் அதர்வா

By செய்திப்பிரிவு

சற்குணம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவுள்ளார்.

2019-ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான 'களவாணி 2' படத்தை இயக்கியிருந்தார் சற்குணம். இந்தப் படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார். ஆனால், கரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி எதுவும் தொடங்கப்படவில்லை.

தற்போது சற்குணம் தனது அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதில் நாயகனாக நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதற்கு முன்பாக, சற்குணம் - அதர்வா கூட்டணி 'சண்டி வீரன்' படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்தில் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

சற்குணம் படம் தவிர்த்து, 'தள்ளிப் போகாதே', 'குருதி ஆட்டம்', 'ஒத்தைக்கு ஒத்த' மற்றும் சாம் ஆண்டன் இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE