ஓடிடியில் வெளியாகிறது ஷெர்ஷா

By செய்திப்பிரிவு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஷெர்ஷா' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ரா. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்தன், இந்தப் படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகிறார். 'ஷெர்ஷா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

'ஷெர்ஷா' வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. தற்போது பல்வேறு மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் 'ஷெர்ஷா' படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அமேசான் ஓடிடி நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கைரா அத்வானி, ஜாவின் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE