மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மோகன்லால்.
ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி என்பது மலையாள திரையுலகில் மிகவும் வெற்றியடைந்த கூட்டணி. இந்தக் கூட்டணி இணைந்த 'த்ரிஷ்யம்' இந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சீனா மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து 'ராம்' படத்தில் இந்தக் கூட்டணி இணைந்தது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு என்பதால், கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 'த்ரிஷ்யம் 2' படத்தில் மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்தது.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவும் இதர மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கு ரீமேக்கை மட்டும் ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார்.
இதனிடையே, மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணையவுள்ளது. 'த்ரிஷ்யம்' படத்தின் அடுத்த பாகமாக அல்லாமல், புதிய த்ரில்லர் கதையில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார்.
உடனடியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது மோகன்லாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.