இனி நாங்கள் கணவன் - மனைவியாக நீடிக்கப் போவதில்லை: ஆமிர்கான் - கிரண் ராவ் கூட்டறிக்கை

By செய்திப்பிரிவு

இனி நாங்கள் கணவன் - மனைவியாக நீடிக்கப் போவதில்லை என்று ஆமிர்கானும், கிரண் ராவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். தற்போது 'தி பாரஸ்ட் கம்ப்' இந்தி ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 2-வது மனைவி கிரண் ராவ் உடன் வாழ்ந்து வந்தார். ஆமிர்கான் - கிரண் ராவ் இணைக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார்.

இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இருவருமே பிரிந்து வாழ முடிவு செய்து, கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆமிர்கான் - கிரண் ராவ் இணை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்கப் போவதில்லை. ஆனால், சக பெற்றோராக, குடும்பமாக இணைந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே நாங்கள் பிரிவதற்கு திட்டமிட்டு இருந்தோம். தற்போது அதை முறைப்படுத்துவதற்கான சூழல் அமைந்தது.

எங்கள் மகன் ஆசாத்துக்கு ஓர் அர்ப்பணிப்பான பெற்றோராக நாங்கள் நீடித்திருப்போம். அவனை நாங்கள் இருவரும் சேர்ந்தே பராமரித்து வளர்ப்போம். திரைப்படங்களிலும், பாணி அறக்கட்டளை உள்ளிட்ட வேலை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.

எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரது தொடர் ஆதரவுக்கும், இந்த உறவின் பரிணாமம் குறித்த அவர்களது புரிதலுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் இந்த முடிவைப் பாதுகாப்பு உணர்வுடன் எடுத்திருக்க இயலாது.

எங்கள் நலம் விரும்பிகளிடம் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம். எங்களைப் போலவே நீங்கள் விவாகரத்து என்பதை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கமாகப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்".

இவ்வாறு ஆமிர்கான் - கிரண் ராவ் இணை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE