பாலிவுட் பாணியைப் பின்பற்றும் சூர்யா: இணையத்தில் குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

பாலிவுட் பாணியைப் பின்பற்றி தனது நிறுவனத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்துள்ளார் சூர்யா.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் திரையுலகினருக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே படப்பிடிப்புக்குள் அனுமதி என்ற விதிமுறையை அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உருவாக்கியுள்ளது. இதனால், பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய தயாரிப்பில் உள்ள படத்தின் படக்குழுவினர் அனைவருக்குமே தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். சிலர் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது அதே பாணியைத் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கும் செயல்படுத்தியுள்ளார் சூர்யா. அவரது 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள படங்களின் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்தப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பணிகளுக்காக சென்னை மாநகராட்சியிடம் சிறப்பு அனுமதியும் பெற்று பணிகளைத் தொடங்கியுள்ளார் சூர்யா. இது தகவலாக சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காகப் பலரும் சூர்யாவைப் பாராட்டி வருகிறார்கள். இதே பணியை இதர தயாரிப்பாளர்களும் விரைவில் பின்பற்றுவார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE