மலையாளப் படங்களுக்கென தனி ஓடிடி தளம் - கேரள அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மலையாளப் படங்களுக்கென தனி ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

கரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸாக முடியாமல் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உண்டானது. இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் உட்பட பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது திரையரங்க விரும்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ ‘ஜோஜி’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இதனை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது. மேலும் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சினிமா மற்றும் கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் கூறும்போது, “சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுவதால் இது போன்ற ஒரு ஓடிடி தளத்தை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். அதே நேரத்தில் பெரிய நடிகர்கள் தாங்கள் விரும்பினால் தங்கள் படங்களை இந்த தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். மேலும் கேரள அரசின் சித்ராஞ்சலி ஸ்டூடியோஸ் மறுசீரமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தும் அளவுக்கு மேம்படுத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE