டெல்லி விமானநிலையத்தின் நிலை குறித்து இயக்குநர் ராஜமெளலி வேதனை தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இதன் காட்சிகள் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இன்னும் 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியதுள்ளது.
'ஆர்.ஆர்.ஆர்' என அழைக்கப்படும் இந்தப் படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. டிவிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அங்குள்ள நிலையைப் பார்த்து தனது ட்விட்டர் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி விமானநிலையம் தொடர்பாக இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன். கரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் வைத்தும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை.
அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். நிச்சயமாக வெளிநாட்டவர்களுக்கு இது நல்லவிதமான பார்வையைத் தராது. இதைக் கவனத்தில் கொள்ளவும். நன்றி"
இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.