‘ப்ளாக் பேந்தர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹீரோ திரைப்படமான ப்ளாக் பேந்தர் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக கருப்பின மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகன் சாட்விக் போஸ்மேனை சர்வதேச நட்சத்திரமாகவும் உயர்த்தியது. எனவே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

ஆனால் 2016ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்திருந்த நாயகன் போஸ்மேன், கடந்த ஆகஸ்ட் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த இரண்டாம் பாகமான ‘ப்ளாக் பேந்தர் - வகாண்டா ஃபாரெவர்’ படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ‘ப்ளாக் பேந்தர் - வகாண்டா ஃபாரெவர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (29.06.21) அன்று அட்லாண்டாவில் உள்ள பைன்கோன் ஸ்டூடியோவில் தொடங்கப்பட்டது. இதனை மார்வெல் தலைவர் கெவின் ஃபீஜ் தெரிவித்தார். இப்படத்தில் மறைந்த சாட்விக் போஸ்மேன் உட்பட முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களில் இந்தப் படத்தை முடிக்க மார்வல் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஹாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் முதல் பாகத்தில் ஷூரி என்கிற நாயகனின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்த லெடிடா ரைட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE