கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய 'பீஸ்ட்' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் இன்று தொடங்கியது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிகிறார். கடந்த ஜூன் 22 விஜய் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கு ஒன்றில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது.

படப்பிடிப்பு அரங்கில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மொபைல் போன் உள்ளிட்டவைக்கு அனுமதியில்லை, உடல்வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE