ஓடிடியில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை

By செய்திப்பிரிவு

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்காகக் கடுமையாக மெனக்கெட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியவில்லை.

இதனால், 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினர் நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தின் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE