'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியாக இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணத்தால், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, இன்று (ஜூன் 29) காலை 'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தங்களுடைய அதிருப்தியை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். #DoctorOnlyInTheatres என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக 'டாக்டர்' படக்குழுவினர் அமைதி காத்து வருகிறார்கள். விரைவில் இது தொடர்பாகப் படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.