இந்தியில் ரீமேக் ஆகிறது ஆரண்ய காண்டம்

By செய்திப்பிரிவு

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்குநராக அறிமுகமான படம் 'ஆரண்ய காண்டம்'. எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் உருவான இந்தப் படம் 2011-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி வெளியானது. இதில் ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின்போது வெற்றி பெறாமல் பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் 'ஆரண்ய காண்டம்' படம் முக்கியமானது. வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்', சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது.

சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதனை இந்தி திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கவுள்ளன.

'ஆரண்ய காண்டம்' படத்தின் ரீமேக்கில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், யார் இயக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE