கடைசிப் படம் குறித்த திட்டம்: இயக்குநர் டாரண்டினோ பகிர்வு

By செய்திப்பிரிவு

தனது கடைசிப் படம் குறித்த திட்டங்களை இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ பகிர்ந்துள்ளார்.

வீடியோ கேசட் கடையில் பணியாற்றி, சினிமாவின் மீதிருக்கும் ஆர்வத்தால் ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்து உலக ரசிகர்களின் கவனத்தையே ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் டாரண்டினோ.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, கச்சிதமான 10 படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும், வயதான காலம் வரையெல்லாம் தனக்குப் படம் இயக்குவதில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். 2019ஆம் வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்துடன் 9 படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது கடைசிப் படம் குறித்த திட்டங்களை டாரண்டினோ பகிர்ந்துள்ளார்.

''எனக்கு சினிமா வரலாறு தெரியும். இது போன்ற ஒரு கட்டத்துக்குப் பிறகு திரைப்பட இயக்குநர்களால் சிறப்பாகப் பணியாற்ற இயலாது. இயக்குநர் டான் ஸீகல் 1979-ல் வெளியான ‘எஸ்கேப் ஃப்ரம் அல்கட்ராஸ்’ படத்துடன் தனது சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருந்தால் ஒரு அற்புதமான கடைசிப் படமாக அது இருந்திருக்கும். ஆனால், அவர் அதற்குப் பிறகும் இரண்டு படங்களை எடுத்தார்.

மேலும், என்னுடைய கடைசிப் படத்தை இஸ்ரேலில் எடுக்கலாமா என்று திட்டமிட்டு வருகிறேன். காரணம் ஜெருசேலத்தில் ஒரு படத்தை நாம் எடுக்கும்போது, எந்த இடத்தில் கேமராவை வைத்தாலும் அந்தக் காட்சி மிக அழகாக இருக்கும்''.

இவ்வாறு க்வெண்டின் டாரண்டினோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE