அசோக் செல்வனின் புதிய படம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழில் 'ஹாஸ்டல்', மலையாளத்தில் 'மரைக்காயர்' ஆகிய படங்களை முடித்துள்ளார் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்குக் கதைகள் கேட்டு வந்தார். இறுதியாகப் புதுமுக இயக்குநர் ஆர்.கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன் பணிகள் இன்று (ஜூன் 28) படப்பூஜையுடன் தொடங்கின. இதில் அசோக் செல்வனுக்கு நாயகிகளாக நடிக்க ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசையமைப்பாளராக கோபி சுந்தர், கலை இயக்குநராக கமலநாதன், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிக்க 'வான்' என்ற படத்துக்குப் பூஜை போடப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. தற்போது அந்தக் கதையைத்தான் அசோக் செல்வனை வைத்து கார்த்திக் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE