சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு நடிகர்களின் தேதிகளை ஒருங்கிணைத்துப் படப்பிடிப்பு தொடங்கப்பட வேண்டும் என்பதால் அதற்கு சில காலமாகும் என்று தெரிகிறது.
ஆகையால், 'ஆச்சாரியா' படத்தை முடித்துவிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தைத் தொடங்குகிறார் சிரஞ்சீவி. இதனை பாபி இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை உள்ளிட்ட அனைத்துமே முடிக்கப்பட்டு, படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளார் பாபி.
இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மோகன் ராஜா இயக்கவுள்ள 'லூசிஃபர்' ரீமேக்கைத் தொடங்கவுள்ளார் சிரஞ்சீவி.