செப்டம்பரில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சூர்யா - வெற்றிமாறன் இணையும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் படம் தவிர்த்து, தா.செ.ஞானவேல் இயக்கி வரும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்துக்குத் தேதிகள் கொடுத்துள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் தாணு தயாரிக்கவுள்ளார்.

'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, 'விடுதலை' படத்தை முடிக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE