ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மறைவு - திரையுலகினர் இரங்கல்

By செய்திப்பிரிவு

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை காலமானார். அவருக்கு வயது 89.

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் சந்தோஷ் சிவன். தமிழில் ‘தளபதி’, ‘ரோஜா’, ‘இருவர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது தந்தை சிவன். மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான இவர் ‘யாகம்’, ‘கொச்சு கொச்சு, ‘அபயம்’ உள்ளிட்ட பல பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன் ‘செம்மீன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள நுழைந்தார். கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞராக அறியப்பட்ட சிவன் இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (23.06.21) சிவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சிவன் காலமானார்.

சந்தோஷ் சிவனுடன் சேர்த்து சிவனுக்கு ஆறு குழந்தைகள். சிவனின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE