முதலில் 'சீயான் 60'; பின் 'கோப்ரா': விக்ரம் முடிவு

By செய்திப்பிரிவு

முதலில் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்து வெளியிட விக்ரம் முடிவு செய்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', 'சீயான் 60' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'கோப்ரா', நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. மேலும், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் இன்னும் முடியவில்லை.

இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சீயான் 60'. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துவிட்டது.

இதில் கிராபிக்ஸ் காட்சிகளும் குறைவு என்பதால், ஜூலையில் 'சீயான் 60' படத்தைத் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் விக்ரம். ஒரே கட்டமாக 'சீயான் 60' படத்தை முடித்துவிட்டு, பின்பு 'கோப்ரா' படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். இந்த இரண்டு படங்களையுமே லலித் குமார் தயாரித்து வருவதால், இதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE