புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்

By செய்திப்பிரிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது ரசிகர் ஒருவரின் நீண்டநாள் ஆசையை நடிகர் கமல்ஹாசன் நிறைவேற்றியுள்ளார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சாகேத். இவருக்கு மூளைப் புற்றுநோய் மூன்றாம் கட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் பேசவேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை. இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் சாகேத்தின் ஆசை குறித்துப் பகிர்ந்திருந்தனர். சந்தியா வைத்யநாதன் என்பவரும் இதுகுறித்துப் பகிர்ந்திருந்தார். இவரது பதிவு கமல்ஹாசனின் அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தது.

இதுபற்றிக் கேள்விப்பட்ட கமல்ஹாசன், சாகேத்துடன் வீடியோ காலில் பேச முடிவெடுத்து, அவரை அழைத்துப் பேசினார். இன்ப அதிர்ச்சிக்கு ஆளான சாகேத் மகிழ்ச்சியுடன் கமல்ஹாசனிடம் உரையாடினார்.

சாகேத், அவரது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் போராளிகள் என்று கமல்ஹாசன் பாராட்டினார். சாகேத், தனது மகனின் செல்லப்பெயர் விருமாண்டி என்பதை இந்த உரையாடலில் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசனையும், ஸ்ருதிஹாசனையும் நேரில் சந்தித்துப் பேச ஆசை என்று கூற, அதற்கு கமல்ஹாசன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பதிலளித்தார்.

கமல்ஹாசனின் இந்த உரையாடல் குறித்துப் பகிர்ந்து, அவரது கனிவான செயலைப் பாராட்டி, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE