'மாநாடு' படத்தில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் காட்சிகள் தனிச்சிறப்பு: இயக்குநர் வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

'மாநாடு' திரைப்படத்தில் நாயகன் சிம்புவும், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும் சந்திக்கும் காட்சிகள்தான் படத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, ஜூன் 21 அன்று முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சொன்னபடியே நேற்று, ’மெஹரஸைலா’ என்கிற பாடல் வெளியானது.

மதன் கார்க்கி வரிகள் எழுதியிருக்கும் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜாவும், பவதாரிணியும் பாடியுள்ளனர். இந்தப் பாடலின் வெளியீட்டை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாடினர். இதில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் சந்திக்கும் காட்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும் என்று கூறினார்.

மேலும், சிம்பு ஓடும் காட்சிகளைப் படம்பிடிக்க காரைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு அவர் உடலைக் குறைத்துத் திடமாக உள்ளார் என்றும், இந்தப் படத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் விஞ்ஞானப் புனைவையும், டைம் லூப் என்கிற விஷயத்தையும் தான் சொல்லியிருப்பதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE