'எம்புரான்' படத்துக்கு முன் 'ப்ரோ டாடி' - பிருத்விராஜ் முடிவு

'எம்புரான்' படத்துக்கு முன்பாக 'ப்ரோ டாடி' படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் பிருத்விராஜ் அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியான படம் 'லூசிஃபர்'. கேரளத் திரையுலகின் பல்வேறு வசூல் சாதனைகளைக் குறுகிய காலத்தில் முறியடித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் 2-ம் பாகமாக 'எம்புரான்' படத்தை அறிவித்தது படக்குழு. 'லூசிஃபர்' படம் முடியும்போதே, அடுத்த பாகத்துக்கான முன்னோட்டத்தோடு முடியும். எனவே, கண்டிப்பாகப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் 'எம்புரான்' படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.

இதனிடையே, மோகன்லால் - பிருத்விராஜ் இணை 'ப்ரோ டாடி' படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் 2-வது படமாக இது அமைந்துள்ளது. இதில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

'ப்ரோ டாடி' படத்தை முடித்துவிட்டு 'எம்புரான்' படத்தின் பணிகளை கவனிக்க பிருத்விராஜ் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE