குறையும் கரோனா அச்சுறுத்தல்: 'மரைக்காயர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், 'மரைக்காயர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான படம் 'மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ், நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே மோகன்லாலுடன் நடித்துள்ளது.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு பாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் கடந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது கரோனா முதல் அலையின் தீவிரத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்த வெளியீட்டிலிருந்தும் பின்வாங்கியது. தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.

இதனை முன்வைத்து ஆகஸ்ட் 12-ம் தேதி 'மரைக்காயர்' படம் வெளியாகும் என்று மோகன்லால் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ஐயப்பன் நாயர், இசையமைப்பாளராக ரோனி நபேல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE