அடுத்த வெப் சீரிஸில் நடிப்பு?- சமந்தா தரப்பு விளக்கம்

By செய்திப்பிரிவு

'தி ஃபேமிலி மேன் 2'வைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.

முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸன் வெளியாகியுள்ளது. ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீஸனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவே இரண்டாவது சீஸனையும் இயக்கியுள்ளனர்.

ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பியிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வெப் சீரிஸுக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமந்தாவின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரவேற்பினால் நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவின.

ஆனால், சமந்தாவுக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதை மறுத்துள்ளனர். இப்போதைக்கு ஊடக வெளிச்சத்திலிருந்து தள்ளியே இருக்கும் சமந்தா தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். உடனடியாக அவருக்கு எந்த வெப் சீரிஸிலும் நடிக்கும் திட்டமும் இல்லை. ஃபேமிலி மேனில் சமந்தா நடித்ததற்குக் காரணம், அதன் இயக்குநர்கள் சம்மதிக்க வைத்த திறனும், நீண்ட நாட்களாக எதிர்மறை கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்கிற சமந்தாவின் ஆசையுமே என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, சமந்தாவின் அடுத்த ஓடிடி தொடர் பற்றிய செய்திகளில் எந்த உண்மையும், அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE