தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார் விஷால்.
கரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரையுலக பிரபலங்கள் அனைவருமே மீண்டும் வீட்டிலேயே முடங்கினார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் தடுப்பூசி போடுவது மற்றும் கரோனா விழப்புணர்வு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்தார்கள்.
தற்போது இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு 70,000 என்ற அளவில் உள்ளது. தென்னிந்தியாவிலும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால், தமிழ்த் திரையுலகினர் ஹைதராபாத்தில் தங்களுடைய படங்களின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் முதல் நபராக விஷால் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளார்.
» என் பயோபிக்கில் நடிக்க எடை கூட வேண்டியதில்லை: விஸ்வநாதன் ஆனந்த் - ஆமிர் கான் உற்சாக உரையாடல்
இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். நாயகியாக டிம்பிள் ஹயாத்தி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக யுவன், ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விஷால் தயாரித்து வருகிறார்.
சண்டைக்காட்சிகளுடன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக ஜூலைக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.