என் பயோபிக்கில் நடிக்க எடை கூட வேண்டியதில்லை: விஸ்வநாதன் ஆனந்த் - ஆமிர் கான் உற்சாக உரையாடல்

விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்று ஆமிர் கான் சொல்ல, அந்தக் கதாபாத்திரத்துக்காக நீங்கள் எடை கூட வேண்டியதில்லை என்று விஸ்வநாதன் ஆனந்த் பதிலளித்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே 'செக்மேட் கோவிட்' என்கிற நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாடினார்கள். இணையம் மூலமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆமிர் கானும் ஆனந்துக்கு எதிராக விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா என்று ஆமிர் கானிடம் கேட்கப்பட்டது.

"கேள்வியே வேண்டாம். மிக எளிதாக பதில் சொல்லக்கூடிய கேள்விகளில் ஒன்று இது. அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி என்பதோடு, அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது இன்னும் உற்சாகமாக இருக்கும். நான் ஒரு கதாபாத்திரத்தை நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரம் ஒரு நபராக இருந்தால், அவர் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முயல்வேன்.

விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரம் என்பதால் அவர் நம்முடனே இருக்கிறார். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து அவரை ஆச்சரியப்படுத்துவேன் என்று நம்புகிறேன். எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்" என்று ஆமிர் கான் பதிலளித்தார்.

இதற்கு ஆனந்த், "அப்படியென்றால் நீங்கள் எந்தக் கட்டத்திலும் அந்தக் கதாபாத்திரத்துக்காக எடை கூட வேண்டியிருக்காது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று நகைச்சுவையாகக் கூற, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் இந்தப் பதிலை ரசித்துச் சிரித்தனர்.

ஏற்கெனவே ஆமிர் கானும், விஸ்வநாதன் ஆனந்தும் இப்படி சில செஸ் போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE