பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள ராப் பாடகர்: பதிவை லைக் செய்த நடிகை பார்வதி மன்னிப்பு 

By செய்திப்பிரிவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரின் பதிவை லைக் செய்ததற்காக நடிகை பார்வதி மன்னிப்புக் கோரியுள்ளார்.

கேரளாவில் சாதிக வெறிக்கு எதிரான ராப் பாடல்களைப் பாடும் இசைக் கலைஞர் ஹிரன் தாஸ் முரளி. இந்தத் துறைக்காக வேடன் என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். முதலில் இதை மறுத்த வேடன், சில நாட்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றைப் பகிர்ந்து, தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரினார்.

அவரது இந்தப் பதிவும் பரபரப்புச் செய்தியானது. ஆனால் அவர் மன்னிப்புக் கேட்கும் தொனி சரியாக இல்லை என்றும், அந்தப் பதிவில் கூட தான் செய்த தவறை அவர் ஒழுங்காக ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

மேலும், இந்த ஒரு வருட காலத்தில், வேடன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், ஒரு முறை கூட அவர் தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்தோ, அழைத்துப் பேசியோ மன்னிப்புக் கோரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே வேடனின் இந்தப் பதிவை முதலில் லைக் செய்தியிருந்த நடிகை பார்வதி திருவோத்து, தற்போது அதை நீக்கி, லைக் செய்ததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

"குற்றம்சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக தைரியமாகப் பேச வந்த பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். பல ஆண்கள் தன் தவறை ஒப்புக்கொள்ளக் கூட யோசிக்கும் நிலையில் அவரது அந்த மனிப்புப் பதிவை நான் லைக் செய்திருந்தேன். ஆனால் இது ஒன்றும் கொண்டாட வேண்டிய மன்னிப்பு அல்ல என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதைக் கிடைப்பது மிக மிக முக்கியம் என்பதை நான் நம்பிகிறேன். வேடனின் இந்த மன்னிப்புப் பதிவு சரியாக இல்லை என்று பாதிக்கப்பட்ட சிலர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் எனது லைக்கை நான் நீக்கிவிட்டேன். என் தவறை திருத்திக் கொண்டுவிட்டேன்.

அவரை மன்னிப்பதும், பாதிப்பிலிருந்து மீள நினைப்பதும் எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் உரிமை. அவர்கள் பக்கம் தான் நான் என்றும் நிற்பேன். என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE