வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ் 

By செய்திப்பிரிவு

'விக்ரம்' படம் தள்ளிப்போடப்பட்டது என்று வதந்தி செய்திகளாக வந்த நிலையில் தற்போது தனது ட்வீட்டுடன் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்போதைக்கு கமலுடன் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 'விக்ரம்' படத்தில் நடிக்கத் தன்னை அணுகியிருப்பதாகவும், இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அர்ஜுன் தாஸை அணுகியுள்ளது படக்குழு.

இந்நிலையில் 'இந்தியன் 2' பட சர்ச்சையால் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. மேலும் விக்ரமுக்கு முன், ஜீது ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம் 2' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம் 2' படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்றும் வதந்திகள் உலவின.

இந்த நிலையில், 'விக்ரம்' திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை இயக்க இரட்டைச் சகோதரர்கள் அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான சந்திப்பின் போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன், அன்பறிவ் சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் 'விக்ரம்' படம் தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE