முகத்தில் தாடியுடன் ஷாரூக் கான் புகைப்படம்: பணிக்கு திரும்புவதற்கான நேரம் என்று பதிவு

By ஏஎன்ஐ

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கும் நடிகர் ஷாரூக் கான், இது பணிக்குத் திரும்புவதற்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.

கடைசியாக ஷாரூக் நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியாகி தோல்வி கண்டது. இதன் பிறகு கடந்த வருடத்தின் பின் பாதி வரை தனது அடுத்த படம் பற்றிய எந்த முடிவையும் ஷாரூக் கான் எடுக்கவில்லை.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' என்ற படத்தில் ஷாரூக் கான் நடித்து வருகிறார். யாஷ் சோப்ரா தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தாடி, நீண்ட தலைமுடியுடன் இருக்கும் தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரூக் பகிர்ந்துள்ளார்.

"காலம் நாட்களாக, மாதங்களாக, தாடிகள் வைத்தும் கணக்கிடப்படும் என்பார்கள். தற்போது தாடியை குறைத்து வேலைக்குத் திரும்புவதற்கான நேரம். சகஜ நிலைக்குத் திரும்பும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான நாட்கள், மாதங்கள் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று இந்த புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் இதற்கு உற்சாகத்துடன் பதிலளித்து வருகின்றனர்.

’பதான்’ திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் இதில் சல்மான்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 'ஏக் தா டைகர்' திரைப்படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்திலேயே சல்மான்கான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE