லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா? - மாதவன் ட்வீட்

By செய்திப்பிரிவு

இயக்குநர் லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் தான் நடிப்பதாக வந்த செய்திகள் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக 'உப்பெனா' படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு இடங்களுக்கான தேர்வுப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தல் குறைவதற்காகப் படக்குழுவினர் காத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடிப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து மாதவன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

ஆனால் தற்போது இதற்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். "இயக்குநர் லிங்குசாமியுடன் பணியாற்ற்றி மீண்டும் அந்த மாயத்தை உருவாக்க ஆர்வமாக இருக்கிறேன். அவரும் மிக இனிமையான மனிதர். துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வந்திருக்கும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை" என்று மாதவன் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் ரன், வேட்டை ஆகிய இரண்டு படங்களில் மாதவன் நடித்துள்ளார். இதில் ரன் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு மாதவனுக்கு ஆக்‌ஷன் ஹீரோ என்கிற பட்டத்தையும் பெற்றுத் தந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE