ஓடிடியில் வெளியாகிறதா 'பொன் மாணிக்கவேல்'?

By செய்திப்பிரிவு

பிரபுதேவா நடித்துள்ள 'பொன் மாணிக்கவேல்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியில் படங்கள் இயக்கி வந்தாலும், தமிழில் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வருபவர் பிரபுதேவா. இவரது நடிப்பில் 'பொன் மாணிக்கவேல்', 'தேள்', 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் 'பொன் மாணிக்கவேல்' படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் சிக்கல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

தற்போது இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சுமுகமாக முடிந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

ஏ.சி.முகில் இயக்கியுள்ள 'பொன் மாணிக்கவேல்' படத்தில் காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE