'ஜகமே தந்திரம்' ஆல்பத்தில் ஜோசப் விஜய்? - சந்தோஷ் நாராயணன் விளக்கம்

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' ஆல்பத்தில் இடம்பெற்ற ஜோசப் விஜய் என்ற பெயர் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 7 அன்று 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டன.

'ஜகமே தந்திரம்' ஆல்பத்தில் ஜோசப் விஜய் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அது நடிகர் விஜய்யின் பெயர் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இது தொடர்பான மீம்களும் வெளியாகி வந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, ''ஜோசப் விஜய் என்பவர் என்னுடைய இசைக் குழுவில் கிதார் வாசிக்கும் ஒரு கலைஞர். என்னுடைய பாடல்களுக்கு அவர் கிதார் வாசித்து வருகிறார்'' என்று குறிப்பிட்டார்.

சந்தோஷ் நாராயணின் விளக்கத்தைத் தொடர்ந்து இந்த சமூக வலைதள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE