புரளிகளைப் பரப்பாதீர்கள்: பாயல் ராஜ்புத் காட்டம்

By செய்திப்பிரிவு

புரளிகளைப் பரப்பாதீர்கள் என்று நடிகை பாயல் ராஜ்புத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'பிக் பாஸ்' சீசன் தொடங்கவுள்ள சமயத்தில், இவர் பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே செல்லவுள்ளார் என்று பலருடைய பெயர்கள் அடிபடும். அவர்களோ இது வெறும் வதந்திதான் என்று மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் இப்போது பாயல் ராஜ்புத்தும் சிக்கியிருக்கிறார். கரோனா அச்சுறுத்தல் குறைந்துவருவதால் விரைவில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்க தெலுங்கில் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த முறை யார் தொகுப்பாளராகப் பணிபுரியவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஆனால், போட்டியாளர்கள் பட்டியல் என்று பலருடைய சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதில் பாயல் ராஜ்புத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக பாயல் ராஜ்புத் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிக் பாஸ் 5 தெலுங்கில் நான் பங்கெடுக்கவில்லை. இதுபோன்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகையாக அறிமுகமான பாயல் ராஜ்புத், அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE