பணியில்லை; வரி கட்டத் தாமதமாகிவிட்டது: கங்கணா

By செய்திப்பிரிவு

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாகத் தான் இருந்தாலும், தற்போது தனக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் தன்னால் சரியான நேரத்தில் வரியைக் கட்ட முடியவில்லை என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கங்கணா, இன்னும் தனது வரிப் பணத்தில் பாதியை அரசாங்கத்துக்குச் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

"எனது வருமானத்தில் 45% வரியாகக் கட்டுகிறேன். அதிக வருமான வரி கட்டும் பிரிவில் நான் இருந்தாலும், அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக நான் இருந்தாலும், எனக்கு இப்போது பணி இல்லை என்பதால் கடந்த வருடம் நான் செலுத்த வேண்டிய வரியில் பாதியை இன்னும் செலுத்தவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாகத் தாமதமாக வரி செலுத்தப்போகிறேன்.

நான் பாக்கி வைத்திருக்கும் வரிப் பணத்துக்கு அரசாங்கம் வட்டியுடன் வசூலிக்கிறது. ஆனால், நான் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். நம் ஒவ்வொருவருக்கும் இந்தக் காலகட்டம் கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் இணைந்தால் இந்தக் காலகட்டத்தை விட வலிமையாக இருக்க முடியும்" என்று கங்கணா கூறியுள்ளார்.

கங்கணா நடிப்பில் 'தலைவி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 'தேஜஸ்', 'தாக்கட்' உள்ளிட்ட படங்களில் கங்கணா நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE