படத் தலைப்பு குறித்து வதந்தி: பவன் கல்யாண் படக்குழுவினர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

படத் தலைப்பு குறித்து வதந்தி பரவி வந்த நிலையில், பவன் கல்யாண் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 28-வது படத்தை இயக்கவுள்ளார் ஹரிஷ் சங்கர். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

பவன் கல்யாணுக்கு கரோனா பாதிப்பு, கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இதன் படப்பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, இந்தப் படத்துக்கு 'சன்சாரி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து மகிழ்ந்தார்கள்.

இது தொடர்பாக 'PSPK 28' படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நாங்கள் உகாதி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அதைத் தற்போது ஒத்திவைத்துள்ளோம். எனினும் படம் குறித்த ஏராளமான உரையாடல்களை சமூக வலைதளங்களில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதிகாரபூர்வ தகவல்கள் அனைத்தும் எங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்".

இவ்வாறு 'PSPK28' படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE