ரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பிறந்த நாளில் தன்னைச் சந்திக்க யாரும் வரவேண்டாம் என்று பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 10) பாலகிருஷ்ணா தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஒவ்வொரு ஆண்டுமே ரசிகர்களுடன் வெகு விமரிசையாகத் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவார் பாலகிருஷ்ணா. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாலகிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள ரசிகர்களே, ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளான ஜூன் 10ஆம் தேதி அன்று என்னைப் பார்க்கவும், வாழ்த்தவும் வந்து நீங்கள் என் மீது பொழிந்து கொண்டிருந்த அன்புக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், என்னை நேரில் சந்தித்து வாழ்த்துவது சரியாக இருக்காது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

உங்கள் அன்பைவிட எந்த ஆசீர்வாதமும் பெரிது இல்லை, அதேபோல உங்கள் ஆரோக்கியத்தை விடப் பெரிய வாழ்த்தும் எனக்கு இல்லை. உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் செலவிடும் மகிழ்ச்சியான நேரம்தான் எனது பிறந்த நாள் கொண்டாட்டமாகும். ரசிகர்கள் யாரும் என்னை வாழ்த்த வரவேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலத்தில் உயிர் நீத்த என் ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE