'ஜகமே தந்திரம்' 2-ம் பாகத்துக்குத் தயார்: தனுஷ்

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' 2-ம் பாகத்துக்குத் தயாராக இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நேற்று (ஜூன் 7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இதனை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள்.

இதில் தனுஷும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது 'ஜகமே தந்திரம்' படம் குறித்தும், சுருளி கதாபாத்திரம் குறித்தும் தனுஷ் கூறியதாவது:

"'ஜகமே தந்திரம்' படம் மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். சிறந்த சூழலில் இந்தப் படம் வெளியாகியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இது போன்ற மகிழ்ச்சியற்ற காலகட்டத்தில் மக்களுக்கு சில பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன்

எனது திரையுலக வாழ்க்கையில் சுருளி எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜிடம் இந்தப் படத்தின் 2-ம் பாகம் எழுதுமாறு கேட்டுள்ளேன். அந்தளவுக்கு எனக்கு இந்தக் கதாபாத்திரம் பிடிக்கும்"

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE