லிங்குசாமி படத்தில் வில்லனாகும் அருண் விஜய்?

By செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக 'உப்பெனா' படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு இடங்களுக்கான தேர்வுப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தல் குறைவதற்காகப் படக்குழுவினர் காத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். இது தொடர்பான சந்திப்பும் நடைபெற்றது. ஆனால், இன்னும் அருண் விஜய் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனாலும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன்தான் லிங்குசாமி படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்பது தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE