பிக் பாஸ் போட்டியாளராகச் செல்லவுள்ளதாக வெளியான செய்திக்கு பூமிகா பதிலளித்துள்ளார்.
இந்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 14 சீசன் முடிந்துள்ளது. இதில் பங்கெடுத்த பலரும் நடிகர்களாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் வரவேற்பை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 15-வது சீசனுக்கான 'பிக் பாஸ்' போட்டியாளர்கள் என்ற ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நடிகை பூமிகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
இந்தச் செய்தி தொடர்பாக பூமிகா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து அழைப்பு வரவில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு நான் செல்லப்போவதில்லை. சீசன்1,2,3-ன் போதே எனக்கு அழைப்பு வந்தது.. பின்னர் மீண்டும் வந்தது. அவை அனைத்தையும் நான் நிராகரித்தேன்.
இந்த முறை எனக்கு அழைப்பு வரவில்லை. இப்போதும் நான் அதில் கலந்துகொள்ள மாட்டேன். நான் ஒரு பிரபலம்தான். ஆனால், என்னை 24 மணி நேரமும் கேமராக்கள் கண்காணிப்பதில் எனக்கு விருப்பமில்லை”
இவ்வாறு பூமிகா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. 2007-ம் ஆண்டு தனது காதலர் பரத் தாகூரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாகத் திரையுலகில் பூமிகா கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.