கரோனா விழிப்புணர்வு: வரலட்சுமியின் புதிய குறும்படம்

By செய்திப்பிரிவு

கரோனா விழிப்புணர்வுக்காக வரலட்சுமி தனது திரையுலக நண்பர்களோடு புதிய குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று (ஜூன் 7) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மேலும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் முகக்கவசத்தை எப்படி அணிவது என்பதே தெரியாமல் உள்ளனர். மூக்கு, வாய் இரண்டையும் மூடாமல் பலரும் முகக்கவசம் அணிகிறார்கள். இதற்காகத் திரையுலக நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறிய குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இதில் கிருஷ்ணா, சதீஷ், சந்தீப் கிஷன், வித்யூ லேகா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக் கூடாது என்பதைத் தெரிவித்துவிட்டு, பின்பு எப்படி அணிய வேண்டும் என்று வீடியோவில் கூறியுள்ளனர்.

இந்தச் சிறிய குறும்படத்தைப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முகக்கவசம் அணியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு முன்னதாக கரோனா தடுப்பூசி தொடர்பான சிறிய குறும்படத்தை வரலட்சுமி உருவாக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE