தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் காஜல் அகர்வாலுக்குத் திருமணம் நடைபெற்றது. இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார்.
இந்நிலையில் தற்போது நாயகியை மையமாகக் கொண்ட இந்திப் படம் ஒன்றில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்கு ‘உமா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏவிஎம்ஏ மீடியா சாபில் அவிகேஷ் கோஷ் தயாரிக்கிறார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது:
''வேடிக்கையான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நடிகையாக, எனக்கு சவால் விடக்கூடிய கதைகளுக்கு எப்போதும் நான் பச்சைக் கொடி காட்டியே வந்திருக்கிறேன். அந்த வகையில் ‘உமா’ படத்தை உங்களுடன் திரையில் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏவிஎம்ஏ மீடியா மற்றும் சுஜாய் கோஷ் ஆகியோருடன் ஒரு சுவாரஸ்யமான படத்தில் இணைவதில் மகிழ்ச்சி''.
இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவர் கேட்டுக்கொண்டால் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று காஜல் அகர்வால் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து காஜல் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். இந்தச் சூழலில் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை காஜல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.