அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள படம் 'பார்டர்'. இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கரோனா முதல் அலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது முழுப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.
தற்போது கரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் உள்ளது. ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, சில தளர்வுகளை மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
» புதிய இயக்குநர்களுக்கான அறிவுரை: ரசிகரின் கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில்
» 'சாஹோ' தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்: கரோனா நிவாரண நிதிக்காகப் புது முயற்சி
இதில் 'பார்டர்' படமும் இணைந்துள்ளது. தற்போது படக்குழுவினர் கூறும் விலையும், ஓடிடி நிறுவனம் கூறும் விலையும் மாறுபட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பார்டர்' படம் தவிர்த்து 'அக்னி சிறகுகள்', 'சினம்' மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.