திருமணம் குறித்து விமர்சித்த பயனர் - ஜுவாலா கட்டா பதிலடி

By செய்திப்பிரிவு

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்கள்.

'காடன்' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்கும் ஹைதரபாத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் ஜூவாலா கட்டா தான் ஒரு நாத்திகர் என்று கூறும் பதிவு ஒன்றையும் அவரது திருமண புகைப்படத்தையும் ஒப்பிட்டு பயனர் ஒருவர் ‘நான் ஒரு நாத்திகர், ஆனால் எனக்கு தேவைப்பட்டால் இந்து கலாச்சாரத்தை பின்பற்றுவேன். ஏனெனில் திருமண புகைப்படங்கள் அழகாக இருக்கவேண்டும் அல்லவா? எப்படி நாம் இன்ஸ்டாகிராமை மறக்க இயலும்? அதுதானே வசதி. இந்த கபடதாரி மக்களை முட்டாள் என்று நினைக்கிறார்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு தனது ஸ்டோரியில் பதிலளித்துள்ள ஜுவாலா கட்டா ‘இந்த அறிவிலி சிறிது ஆய்வு செய்து நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டதை தெரிந்துகொண்டிருக்க வேண்டும். உங்கள் துரதிர்ஷ்டவசம் ப்ரோ. அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE