அடுத்த ரஜினி படத்தை இயக்குவதாக வெளியான செய்திக்கு கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளது.
இதற்காகப் பல்வேறு இயக்குநர்கள் ரஜினியிடம் கதைகள் கூறி வருகிறார்கள். இதில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர். தற்போது விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். அதற்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில், அடுத்த ரஜினி படம் இயக்கவுள்ளதாக வெளியான செய்தி குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:
"அவர் இப்போதுதான் ‘அண்ணாத்த’ முடித்து வந்திருக்கிறார். நானும் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். பார்க்கலாம், என்ன நடக்கும் என்பது தெரியாது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்”.
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக 'பேட்ட' படத்தில் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. அந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.