'ஜகமே தந்திரம்' படத்தில் என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததே: ஜோஜு

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' படத்தில் என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் என்று நடிகர் ஜோஜு தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக, மலையாள நடிகர் ஜோஜு பேட்டியளித்துள்ளார். அவர் மலையாளம் தவிர்த்து இதர மொழியில் நடித்துள்ள முதல் படமாக 'ஜகமே தந்திரம்' உருவாகியிருப்பது நினைவுக் கூறத்தக்கது.

'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக ஜோஜு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"எனது படங்களில், இயக்குநர், திரைக்கதை இரண்டை மட்டுமே நான் பார்ப்பேன். இந்த இரண்டு காரணிகளை வைத்துத்தான் எந்தப் படத்தையும் எடை போடுவேன். ஜகமே தந்திரம் ஒரு நாயகனுக்கான படமாக இருந்தாலும் என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததே.

கார்த்திக் சுப்பராஜால் தான் நான் தமிழில் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஜகமே தந்திரத்துக்குப் பிறகு சோளா என்கிற மலையாளப் படத்தையும் தமிழுக்குக் கொண்டு வருகிறோம். சோளா படத்தில் வசனங்கள் குறைவு. தமிழ் ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும். தமிழ் வடிவத்துக்கு அல்லி என்று பெயரிட்டிருக்கிறோம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை வழங்கவிருக்கிறார்"

இவ்வாறு ஜோஜு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE