’மாநாடு’ அப்டேட் கொடுத்த யுவன்: ரசிகர்கள் குஷி

By செய்திப்பிரிவு

'மாநாடு' படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதர காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கரோனா இரண்டாவது அலை தீவிரத்தால், படக்குழுவினர் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்திருந்தனர்.

தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால், 'மாநாடு' படத்தின் முதல் பாடலை வெளியிடப் படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பதிவில் "'மாநாடு' படத்தில் முதல் பாடல் விரைவில்" என்று ட்வீட் செய்துள்ளார்.

யுவனின் இந்த ட்வீட்டால், சிலம்பரசன் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE