பீர்பால் தமிழ் ரீமேக்கில் நாயகனாக சாந்தனு பாக்யராஜ்

By செய்திப்பிரிவு

கன்னட துப்பறியும் படமான 'பீர்பாலி'ன் தமிழ் ரீமேக்கில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கிறார். கிருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

2019-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான துப்பறியும் த்ரில்லர் படம் 'பீர்பால்'. எடுக்கும்போதே திரை வரிசையாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டதால், வெளியாகும் போது 'பீர்பால் ட்ரீலஜி கேஸ் 1: ஃபைண்டிங் வஜ்ரமுனி' என்கிற பெயரில் வெளியானது.

எம்ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருந்தார். வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியானதும் மொழிகள் தாண்டிய ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க மற்ற மொழிகளில் போட்டி நிலவியது. ஏற்கெனவே தெலுங்கில் 'திம்மரசு' என்கிற பெயரில் தெலுங்கில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடியால் இதன் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது.

தற்போது தமிழில் இந்தப் படம் ரீமேக் ஆகிறது. சாந்தனு கதாநாயகனாக நடிக்க, பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 'மதியாளன்' என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

தற்போது 'ராவண கூட்டம்' படத்தில் சாந்தனு நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்குப் பிறகு மதியாளன் தொடங்கும் என்றுத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE