இதுவரை நாங்கள் பணியாற்றியதில் சவாலான படைப்பு 'ஃபேமலி மேன் 2': இயக்குநர்கள் பதிவு

By செய்திப்பிரிவு

இதுவரை தாங்கள் பணியாற்றியதிலேயே மிகச் சவாலான படைப்பாக 'தி ஃபேமலி மேன் 2' இணையத் தொடர் இருந்தது என்று அதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே கூறியுள்ளனர்.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.

முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை உருவாக்க அமேசான் ப்ரைம் முடிவெடுத்து, தற்போது இந்த சீஸன் ஜூன் 3 நள்ளிரவு வெளியாகிறது. இந்த சீஸனில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இது குறித்து இதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.

”தொடர் வெளியாகும் நாள் இதோ வந்துவிட்டது. ஒரு படைப்பின் உச்சம் என்ன, பிரச்சினை என்ன என்பதைப் பற்றி பேச அதன் முடிவில் ஒவ்வொரு படைப்பாளிக்குமே ஒரு கதை இருக்கும். இதுவரை நாங்கள் பணியாற்றிய படைப்புகளிலேயே மிகச் சவாலான படைப்பாக ஃபேமலி மேன் இணையத் தொடரின் இரண்டாவது சீஸன் அமைந்தது.

நம் அனைவருக்கும் இது இக்கட்டான காலகட்டம். இழப்பின்றி, வேதனை இன்றி நம்மில் ஒருவரும் இல்லை. இழந்த உயிர்களை நினைத்து அனுதாபம் சிந்தும் அதே வேளையில் முன்களப் பணியாளர்களின் செயல்களுக்கும், தைரியத்துக்கும், நமக்கு நன்மை செய்யப் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நேர்மறையாக, நம்பிக்கையுடன் இருப்பதுதான் எங்களுக்குக் ]கடினமான விஷயமாக இருந்தது. உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்த அன்பும், பாராட்டும், அழுத்தமும் தான் எங்களை முழுக்கச் செலுத்தியது. தொற்று காலத்தில், இரண்டு ஊரடங்கைத் தாண்டி பணியாற்றிய நாங்கள், எங்களின் அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ப்ரைம் வீடியோ குழுவுக்கு, அவர்களின் பொறுமைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருபோம்.

இரண்டாவது சீஸன் நள்ளிரவு வெளியாகிறது. ஒரு விஷயம் மிகத் தெளிவாக இருக்கிறது. தி ஃபேமலி மேன் தொடர் ரசிகர்களாகிய உங்களுக்குச் சொந்தமானது.

எங்களுக்குக் கிடைத்த அத்தனை அன்பையும் நன்றியுடன் என்றும் நினைவில் வைத்திருப்போம்” என்று இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE